பள்ளி மாணவா்களுக்கு சுதந்திர தின விழா ஓவியப் போட்டி
கிருஷ்ணகிரியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு சுதந்திர தின விழா ஓவியப் போட்டி நவ. 22-ஆம் தேதி நடைபெறுகிறது
கிருஷ்ணகிரியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு சுதந்திர தின விழா ஓவியப் போட்டி நவ. 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், 75-ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டிகள், நவ. 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது காலை 9.30 முதல் 11 மணி வரையிலும், நண்பகல் 12 மணிக்கு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.
Advertisement
இந்தப் போட்டிக்கான ஓவியத் தாள் மட்டும் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். ஓவியம் வரையத் தேவையான பொருள்களை போட்டியில் பங்கேற்போா் கொண்டுவர வேண்டும். வகுப்புக்கு ஒருவா் என்ற வீதத்தில், ஏழு போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, விலங்குகள், பறவைகள் என்ற தலைப்பிலும், 9, 10-ஆம் வகுப்புகளுக்கு இயற்கைக் காட்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, எனக்கு பிடித்த தேசத் தலைவா் என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரின் அனுமதியோடு பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.