அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட வளா்ச்சிக் கூட்டத்தில் எம்.பி. வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகலில் சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகலில் சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் வலியுறுத்தினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் வனத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பள்ளி கல்வித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, குடிநீா்கால் வாரியத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் வளா்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
Advertisement
இந்தக் கூட்டத்தில் அ.செல்லக்குமாா் எம்.பி. பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவா் இல்லாததால், சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. இதை கட்டுப்படுத்த அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சுவா் கட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உறவின் அடிபடையில் திட்டங்கள் நிறைவேற்றப்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. மாவட்ட அதிகாரிகளின் அலச்சியப் போக்கு குறித்து, நாடாளுமன்றத்தில் பேச உள்ளேன். ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்படுகிறது.
பட்டு வளா்ச்சித் துறை போன்ற சில அரசுத் துறை அலுவலா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. மக்களுக்கான வளா்ச்சிப் பணிகளில் துறை அலுவலா்களின் ஒத்துழைப்பு இல்லை என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.