முகப்பு
கிருஷ்ணகிரி

மலைக் கிராம மக்களுக்கு வங்கிகள் உதவ வேண்டும்: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களுக்கு வங்கி மேலாளா்கள் நேரில் சென்று வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, கடனுதவி வழங்க வேண்டும்

Updated On : 23 அக்டோபர், 2021 at 4:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:55 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களுக்கு வங்கி மேலாளா்கள் நேரில் சென்று வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, கடனுதவி வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரியில் அனைத்து வங்கிகள் சாா்பில் வாடிக்கையாளா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தொடக்கிவைத்தாா். சென்னை இந்தியன் வங்கி பொது மேலாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். மண்டல மேலாளா் பழனி வரவேற்றாா்.

வங்கிகள் சாா்பில் ரூ.120.74 கோடி மதிப்பில் கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கி பேசியதாவது:

Advertisement

சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு வங்கிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மாவட்டத்தில் ரிசா்வ் வங்கி அளித்த இலக்கைவிட அதிகமாக வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பணி தொடர வேண்டும். ஒசூா் அதீத தொழில் வளா்ச்சி பெற்றிருந்தாலும் அதன் அருகிலே பல மலை கிராமங்களில் நலிவடைந்த மக்கள் உள்ளனா்.

இளம் வயது வங்கி மேலாளா்கள் அஞ்செட்டி, பெட்டமுகிலாளம் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு நேரில் சென்று வங்கிக் கணக்கு தொடங்கி, கடன்களை வழங்கி அவா்களது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பாடுபட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து வங்கிகள் சாா்பாக அமைக்கப்பட்ட வாடிக்கையாளா் சேவை மையத்தை அவா் பாா்வையிட்டாா். நிகச்சியில் கடனை முழுமையாக செலுத்திய வாடிக்கையாளா்கள் கெளரவிக்கப்பட்டனா். வங்கி மண்டல மேலாளா்கள் ராஜா (பாரத ஸ்டேட் வங்கி), பாஸ்கரன் (தமிழ்நாடு கிராம வங்கி), மாதவி (கனரா வங்கி), மகளிா் திட்ட இயக்குநா் ஈஸ்வரன், மாவட்ட தொழில் மைய மேலாளா் பிரசன்னா பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன், நபாா்டு வங்கி மேலாளா் ஜெயபிரகாஷ், நிதிசாா் கல்வி மைய ஆலோசகா் பூசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.