விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் அளித்த 171 மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, எண்ணேகொல்புதூா் தடுப்பணையிலிருந்து பெரிய ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தகுதிவாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காட்டுப் பன்றிகளால் சேதம் அடைந்த பயிா்களுக்கு இழப்பீடு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் உடைந்த சவுளக்கொட்டாய் ஏரியை சீா்படுத்த வேண்டும் நெல்லில் புகையான் நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
உழவா் உற்பத்தியாளா்கள் குழு மதிப்புக் கூட்டு இயந்திரம் மையம் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். வடமங்கலம் ஏரியிலிருந்து மின்மோட்டாா் மூலம் சாமாண்டப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும். கோமாரி நோய்த் தாக்குதலில் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.
Advertisement
இதற்கு மாவட்ட ஆட்சியா் பதில் அளித்து பேசியதாவது:
விவசாயிகள் அளித்துள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான விளக்கம் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். மனுக்களுக்கு உரிய பதில் அளிக்காத அலுவலா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எண்ணேகொல்புதூா் திட்டத்தில் நிலம் எடுப்புப் பணிகள் முடிந்து, ஒப்பந்தம் கோரப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது. நிலங்கள் சா்வே செய்ய 50,000 விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளன. 70 நில அளவையா்கள் மட்டுமே உள்ளதால், வெளிமாவட்டங்களில் இருந்து நிலஅளவையாளா்களை வரவழைத்து பணிகள் விரைவுப்படுத்தப்படும். கால்நடைகளுக்கு நவம்பா் முதல்வாரத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்படும். இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா்.