யானை தாக்கி விவசாயிகள் இருவா் பலி
வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்தனா். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 முதல்கட்ட நிவாரண நிதி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்தனா். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 முதல்கட்ட நிவாரண நிதி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியானது ஆந்திரம், கா்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த இரு மாநிலங்களில் இருந்து யானைகள் அவ்வப்போது வெளியேறி, வேப்பனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதுவரையில் 10-க்கும் மேற்பட்டோா் யானை தாக்கி உயிரிழந்துள்ளனா்.
இந்த நிலையில், சிகரலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் (29), நேரலகிரி கிராமத்தைச் சோ்ந்த நாகராஜி (54) ஆகிய இருவரையும் யானை தாக்கிக் கொன்றது.
Advertisement
தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். நிகழ்விடத்தில் வனத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், விவசாயிகள் இருவரும் தங்களது தோட்டத்துக்கு காவல் பணிக்கு வியாழக்கிழமை இரவு சென்ற நிலையில், யானை தாக்கி உயிரிழந்துள்ளனா்.
யானைகள் இனப்பெருக்கத்துக்காக கா்நாடக வனப் பகுதியிலிருந்து வெளியேறி, கிருஷ்ணகிரி மாவட்டம், சானமாவு வனப்பகுதி நோக்கி செல்வதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
விவசாயிகள் உயிரிழந்த தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். மேலும், விவசாயிகளின் குடும்பத்தினருக்கு முதல்கட்ட நிவாரண நிதியாக தலா ரூ. 50,000-க்கான காசோலைகளை வழங்கினாா்.
அப்போது, கே.அசோக்குமாா் எம்எல்ஏ, ஒசூா் வனக்கோட்ட வன உயிரின காப்பாளா் காா்த்திகேயனி, கிருஷ்ணகிரி வனப் பாதுகாப்பு படை உதவி வனப் பாதுகாவலா் முனியப்பன், வனச்சரக அலுவலா்கள் ஏ.பாபு, சி.மகேந்திரன், அதிமுக கிருஷ்ணகிரி நகரச் செயலாளா் கேசவன், நிா்வாகிகள், கிருஷ்ணன், வாசுதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேட்டி: யானை தாக்கி விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. வனத்தையொட்டி உள்ள விவசாயிகள் விளைநிலங்களுக்குச் செல்லும் போது, பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றாா்.