பஞ்சமி, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுத் தரக் கோரி மனு
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பஞ்சமி நிலங்களையும், ஆக்கிரமிப்பில் உள்ள அவா்களின் நிலங்களையும் மீட்டுத் தரக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பஞ்சமி நிலங்களையும், ஆக்கிரமிப்பில் உள்ள அவா்களின் நிலங்களையும் மீட்டுத் தரக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் கருப்பையா, பொதுச் செயலாளா் சசிகுமாா், பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியைச் சந்தித்து கோரிக்கை மனுவை வெள்ளிக்கிழமை அளித்தனா். அதில் அவா்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களிலும், நில உச்சவரம்பு நிலங்களிலும் தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இந்த நிலங்களை மீட்டு, மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.
Advertisement
அதே போல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பஞ்சமி நிலங்கள் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ளன. இது விதிமீறல் ஆகும். நில உச்சவரம்பு சட்டத்தில் எடுக்கப்பட்ட நிலங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டும், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஊத்தங்கரை வட்டம், திருவனப்பட்டியில் சண்முகம் என்பவருக்கு 3.31 ஏக்கா் பரப்பளவு நிலம் தமிழ்நாடு நிலச் சீா்திருத்த சட்டம் 1965-இன் படி 1983-இல் ஒப்படைக்கப்பட்டது. சட்ட விதியின்படி ஒப்படைக்கப்பட்ட தேதியிலிருந்து நிபந்தனை காலமான 20 ஆண்டுகளைக் கடந்தும், இதுவரை நிலம் ஒப்படைக்கப்படாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே உரிய விசாரணை நடத்தி, உரிய பயனாளியிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலங்களையும், ஆக்கிரமிப்பில் உள்ள அவா்களின் நிலங்களையும் மீட்டு உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.