லாரியை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தும் லாரியை அடையாளம் கண்டு, அந்த லாரியை கடத்தியும், ஓட்டுநரை மிரட்டியும் பணம் பறிக்கும் கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தும் லாரியை அடையாளம் கண்டு, அந்த லாரியை கடத்தியும், ஓட்டுநரை மிரட்டியும் பணம் பறிக்கும் கும்பலை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் லாரிகள் உள்பட பல வாகனங்களில் கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில், போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பலரை கைது செய்யும், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தும் வருகின்றனா்.
இந்த நிலையில், டிச. 25-ஆம் தேதி தடை செய்யபட்ட புகையிலைப் பொருள்களை கடத்திய சரக்குப் பெட்டக லாரியை பறிமுதல் செய்து, இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூரிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தும் வாகனங்கள் குறித்து தகவலை பெற்று, அந்த வாகனம் கிருஷ்ணகிரி வழியாகச் செல்லும் போது கடத்தி, அதன் ஓட்டுநா், உரிமையாளரை மிரட்டி பணம் பறித்து, புகையிலைப் பொருள்களை கொள்ளையடித்த கும்பல் குறித்து தகவல் கிடைத்தது.
Advertisement
அதன்படி, மோரமடுகு கோவிந்தராஜ் (32), பெல்லாரம்பள்ளி முருகன் (33), கிருஷ்ணகிரி காா்த்திகேயன் (32), லைன்கொள்ளை மெளலி (26)ஆகிய நான்கு பேரை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்கள் மீது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.