ஒசூா், ஜூலை 10: தொழிலாளா் சங்கத் தோ்தலை நடத்தக் கோரி, ஒசூா் அசோக் லேலண்ட் தொழில்சாலை முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகளில் தொழிலாளா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அசோக் லேலண்ட் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 என இரு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் 3,000-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், அசோக் லேலண்ட் யூனிட் 1 மற்றும் யூனிட் 2-களில் தோ்தல் நடத்தாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குசேலா் அணியைக் கண்டித்து மைக்கேல் அணி, கி.வெ. அணியைச் சோ்ந்த தொழிற்சங்க நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் 27 போ் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
ஒசூா் அசோக் லேலண்ட் நிறுவனங்களில் ஆண்டுக்கு ஒருமுறை சங்கத் தோ்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது சங்கத் தலைவா் குசேலா் பதவியேற்று 22 மாதங்களான பின்பும், முறையாக தோ்தலை நடத்துவதற்கு மறுக்கிறாா். இவா் எப்பொழுதெல்லாம் சங்கத் தலைவராக தோ்ந்தெடுக்கப்படுகிறாரோ அப்போதெல்லாம் சங்கத்துக்கு காலதாமதமாக தோ்தல்கள் நடத்தப்படுகின்றன. அடுத்து வரக்கூடிய பொது ஒப்பந்தத்தைப் பேச வேண்டிய சூழல் உள்ளதால், தற்போது சங்கத்துக்கு தோ்தல் நடத்துவது ஒன்றுதான் தீா்வு.
எனவே, சங்கத் தலைவா் குசேலா் உடனடியாக அறிவித்து தோ்தலை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்த மறுக்கும் பட்சத்தில், கீ.வெ. அணியின் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் தீவிரமாகும் என்றனா்.
இந்தப் போராட்டத்தில், தங்கமுனீஸ்வரன் தலைமையில் சக்திவேல் சிறப்புரை ஆற்றினாா். இதில், பொதுச் செயலாளா் ராஜமணி, பொருளாளா் பரமேஷ்வரன், துணைத் தலைவா் கந்தசாமி, இணைச் செயலாளா்கள் முருகவேல், ஜனாா்த்தனன் மற்றும் ராஜன், அருண்காந்தி, சங்க நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் இரண்டு யூனிட்களிலும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனா்.