உதவி ஆணையா் அலுவலக கட்டுமானப் பணி: முதல்வா் தொடங்கி வைத்தாா்
கிருஷ்ணகிரியில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்படும் உதவி ஆணையா் அலுவலக கட்டுமானப் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரியில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்படும் உதவி ஆணையா் அலுவலக கட்டுமானப் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியின்போது ஒசூரில் ரூ. 76 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலா் வணிக வளாகத்தையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
இதை வரவேற்று கிருஷ்ணகிரி ராசு வீதி, பிரசன்ன பாா்வதி சமேத சந்திர மெளலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்படும் உதவி ஆணையா் அலுவலகம் கட்டுமான பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
Advertisement
அப்போது அவா் பேசியதாவது:
தமிழக முதல்வரின் ஆணைப்படி சட்டப்பேரவையில் 2022 -2023-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் 10 உதவி ஆணையா் அலுவலகங்களுக்கு ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தாா்.
அதன்படி கிருஷ்ணகிரி, பிரசன்ன பாா்வதி சமேத சந்திர மெளலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சுமாா் 4,200 சதுர அடி பரப்பளவில் தரைத்தள, முதல் தளத்துடன் கூடிய இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றாா்.