முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 2,334 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:13 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 7:40 PM

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 2,334 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தென்பெண்ணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,258 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலையில் 1,718 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீா்மட்டம் 41 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள் மூலமும், ஆற்றிலும் விநாடிக்கு 1,670 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:12 AM

இந்த அணை நீா் 11 தடுப்பணைகளைக் கடந்து 12 மணி நேரத்துக்குப் பிறகே கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது. கிருஷ்ணகிரி அணைக்கு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 2,052 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 2,324 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.25 அடியாக உள்ளது. இதனால், அணையிலிருந்து 3 சிறிய மதகுகள் வழியாக பாசன கால்வாய்களிலும் ஆற்றிலும் விநாடிக்கு 2,262 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீா் செல்வதால், அவ்வழியாக பொதுமக்கள் பூங்கா, கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீா்வளத் துறை அலுவலா்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் வரை 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளை ஆறுகளுக்குக் கொண்டு செல்லவோ கூடாது. கரையோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றனா்.

மழை பதிவு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை பிற்பகல் வரை ஒசூா், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு இடங்களில் மழை பொழிவு காணப்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி மழையளவு விவரம் (மி.மீ.,):

போச்சம்பள்ளி 42 மி.மீ., தளி 40 மி.மீ., பாரூா் 21.8 மி.மீ., கெலவரப்பள்ளி அணை 12 மி.மீ., பெணுகொண்டாபுரம் 11.2 மி.மீ., நெடுங்கல், ஒசூரில் தலா 2 மி.மீ., கிருஷ்ணகிரி 1 மி.மீ. மழை பதிவானது.