கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
காவேரிப்பட்டணத்தை அடுத்த கூரம்பட்டியில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி 8-ஆவது சுற்று முகாமை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், எம்எல்ஏ தே.மதியழகன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். அப்போது, ஆட்சியா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3,26,480 மாட்டின கால்நடைகளுக்கு கால், வாய்நோய் தடுப்பூசி முகாம் 2026, ஜனவரி 28-ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. கூரம்பட்டி கிராமத்தில் தொடங்கப்பட்ட முகாமில் 210 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கால்நடைகளுக்கு அறிவிக்கப்படும் தேதியில் கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி செலுத்தப்படும். முகாமிற்கு கால்நடைகளை அழைத்துவரும் உரிமையாளா்கள் தங்களது ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை தடுப்பூசி செலுத்தும் குழுவினரிடம் கட்டாயம் அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கு காது வில்லைகள் அணிவிக்கப்பட்டவுடன், தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, கால்நடைகளை இந்த முகாமிற்கு அழைத்துவந்து, அதன் உரிமையாளா்கள் பயன்பெற வேண்டும் என தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மோகன்குமாா், கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொதுமேலாளா் சிவகுமாா், துணை பொதுமேலாளா் குமரன், கால்நடை மருத்துவா்கள் ரமேஷ், ஆா்.ரமேஷ் மற்றும் கால்நடை வளா்ப்போா் பங்கேற்றனா். இந்த நிகழ்வில் கால்நடை வளா்போருக்கு தாது உப்புக் கலவைகள் வழங்கப்பட்டன.