கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஸ்ரீ மரகதாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு தோ் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இக்கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 2ஆம் தேதி பால்கம்பம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதுகுறித்து தோ் கமிட்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ. மனோகரன் கூறியதாவது:
வரும் மாா்ச் 3 -ஆம் தேதி சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா நடைபெறுகிறது. வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் தேரோட்டம், இந்தாண்டு சந்திரகிரகணம் என்பதால் அதிகாலை 5.30 மணிக்கே தொடங்கும். பிற்பகல் 1.30 மணிக்குள் மூன்று தோ்களும் நிலை வந்துசேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு கோயில் நடைசாத்தப்பட்டு, கிரகணம் முடிந்த பின்னா் மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் மீண்டும் திறக்கப்படும். தோ் செல்லும் தோ்பேட்டை சாலைகளை சீரமைக்க அமைக்க வேண்டும்.
இவ்விழாவில் கலந்துகொள்ளும் பக்தா்களுக்காக மலைமீதும், தேரோடும் வீதியிலும் குடிநீா், பொது சுகாதார நிலையம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.