முகப்பு
நாமக்கல்

சிமென்ட் விலையேற்றம்: சேலத்தில் ரூ.200 கோடி கட்டுமானப் பணிகள் முடக்கம்

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் சிமென்ட் விலையேற்றம் காரணமாக, கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:39 AM
பகிர்:

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் சிமென்ட் விலையேற்றம் காரணமாக, கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சேலத்தில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் சிமென்ட் போதுமான அளவில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவியது. இதற்கு மூலப்பொருள்கள் கிடைக்காததால் நிறுவனங்களால் போதிய அளவில் சிமென்ட் உற்பத்தி செய்ய இயலவில்லை என்று கூறப்பட்டது.

தற்போது அனைத்துத் தனியார் நிறுவனங்களின் சிமென்ட் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில்

ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பொறியாளர்கள் சங்க நிறுவனர் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியது:

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக நாளொன்றுக்கு ஒரு கோடியே 20 லட்சம் சிமென்ட் மூட்டைகள் தேவைப்படுகின்றன. இவற்றில் 90 சதம் தனியார் சிமென்ட் நிறுவனங்கள் மூலமே நிவர்த்தி செய்யப்படுகிறது.

அரசு நிறுவனங்களால் இவ்வளவு அதிகமான சிமென்ட் மூட்டைகளை உற்பத்தி

செய்து விநியோகிக்க இயலவில்லை.

தனியார் நிறுவனங்கள் சிமென்ட் விலையை ஏற்றும் போதும், உற்பத்தி செய்து வெளியே அனுப்பப்படும் சிமென்ட் மூட்டைகளை நிறுத்திவைத்து செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சி செய்யும். அதுபோல, சந்தையில் கடந்த சில நாள்களாக சிமென்ட் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது இந்த நிறுவனங்கள் சிமென்ட் மூட்டைகளை விற்பனையகங்களுக்கு வழக்கமான அளவில் அனுப்பி வருகின்றன. ஆனால், அனைத்து நிறுவனங்களும் சிமென்ட் விலையை ரூ.50 வரை உயர்த்தியுள்ளன.

சென்னையில் சில இடங்களில் தற்போதும் சிமென்ட் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

சிமென்ட் நிறுவனங்கள் நிகழாண்டில் இதுவரை மூன்று முறை விலையை உயர்த்தியுள்ளன.

சிமென்ட் விலையேற்றத்தால், தமிழகத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசுக் கட்டுமானப் பணிகளும் கணிசமான அளவு முடங்கியுள்ளன. இதனால், ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் வெங்கடாசலம்.

சேலத்தில் ரூ.200 கோடி... இதுகுறித்து சேலம் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் பி.பாஸ்கரன் கூறியது:

சேலத்தில் உள்ள விற்பனையகங்கள், விநியோகஸ்தர்களிடம் கடந்த வாரத்தில் சிமென்ட் மூட்டைகள் கிடைக்கவில்லை.

மூலப்பொருள்களின் பற்றாக்குறை நிலவுவதால் பல தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சிமென்ட் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு அதிக அளவிலான சிமென்ட் மூட்டைகளை அனுப்பி வருகின்றன. அதே சமயம் அனைத்து தனியார் நிறுவனங்களும் சிமென்ட் விலையைக் கணிசமாக உயர்த்தியுள்ளதால், சேலத்தில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →