பவானி-குமாரபாளையம் பழைய பாலம் சேதம்: சீரமைக்கக் கோரிக்கை
பவானி - குமாரபாளையம் பழைய பாலத்தில் ஏற்பட்டுள்ள குழியால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
பவானி - குமாரபாளையம் பழைய பாலத்தில் ஏற்பட்டுள்ள குழியால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
எனவே, இதனை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானி - குமாரபாளையம் இடையே காவிரி ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தில் மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், பாலம் வலுவிழந்ததால் தற்போது இலகு ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இரு நகரங்களுக்கு இடையில் எளிதில் சென்று வர பொதுமக்கள் பெரிதும் பழைய பாலத்தையே பயன்படுத்தி வரும் நிலையில், பாலத்தின் நடுவே குழி ஏற்பட்டுள்ளது.
சிறிதாக ஏற்பட்ட இக்குழி தற்போது பெரிதடைந்து, எதிர்பாராமல் யாரேனும் கால் வைத்துவிட்டால் ஆற்றுக்குள் இடறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த, தகவலின் பேரில் குமாரபாளையம் போலீஸார் குழியின் மேல்பகுதியில் டயர் வைத்தும், கொடி கட்டியும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயினும், இரவு நேரத்தில் செல்லும்போது பொதுமக்கள் அச்சத்திலேயே செல்ல வேண்டியுள்ளது. எனவே, இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதினைச் சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.