குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தை முதலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
முதலைப்பட்டிபுதூர் பகுதியில் 300 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறோம். இங்குள்ள பெரும்பாலான பொது குடிநீர் இணைப்புகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆனால் சில வீடுகளுக்கு மட்டும் பல மணி நேரம் தண்ணீர் வருகிறது. மேலும் சிலர் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சுகின்றனர். இதனை கண்காணித்து, அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர, மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது.