நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல்-திருச்சி சாலை ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் சரவணன். ரிக்வண்டி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (29). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு அனிஷா (8) என்ற மகளும், தனிஷ் (7) என்ற மகனும் இருந்தனர். தனிஷ் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ஆம் வகுப்புப் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்த சசிகலா உணவில் விஷம் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. உயிருக்குப் போராடிய 3 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் தனிஷ் கடந்த 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
சசிகலா, அவரது மகள் அனிஷா ஆகியோருக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். சிறுமி அனிஷா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.