தலைக்கவசம் அணிய வலியுறுத்தி நாமக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் பொங்கல் கரும்பு வழங்கி அறிவுறுத்தினர்.
நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, நாமக்கல் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. ரங்கநாதன் தலைமையிலான குழுவினர் நாமக்கல் நகரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வியாழக்கிழமை காலை பொங்கல் கரும்பு வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். நாமக்கல் பேருந்து நிலையம், பூங்கா சாலை, அண்ணா சிலை, சேலம் பிரிவு சாலை, உழவர்சந்தை ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களையும் கண்டறிந்து அவர்களுக்குக் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தியும் அதனால் ஏற்படும் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தி அவர்களுக்கு கரும்பு வழங்கினர். அதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களையும் நிறுத்தி விபத்து குறித்து அறிவுறுத்தி சீட்பெல்ட் அணிய செய்து பொங்கல் கரும்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.