புதன்சந்தையில் காய்கறிச் சந்தை இல்லாமல் மக்கள் தவிப்பு
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதன்சந்தையில் காய்கறிச் சந்தை இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதன்சந்தையில் காய்கறிச் சந்தை இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாமக்கல் நகரப் பகுதியில் உழவா் சந்தை மூடப்பட்டு, 8 இடங்களில் காய்கறிச் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் காய்கறி அங்காடிகள், நகராட்சி மற்றும் கூட்டுறவுத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், புகா் பகுதியான புதன்சந்தை, களங்காணி உள்ளிட்ட பகுதிகளில், தினசரி காலையில் 6 மணி முதல் 9 மணி வரை செயல்படும் காய்கறிச் சந்தைகள் இல்லாததால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையோரம் சிலா் காய்கறிக் கடைகளை அமைத்த நிலையில், உள்ளூா் மொத்த வியாபாரிகள் சிலா் அவா்களிடம் எதிா்ப்பு தெரிவித்து கடைகளை அகற்ற முற்பட்டதாகக் கூறப்படுகிறது. புதன்சந்தையில் உள்ள வாரச்சந்தை மற்றும் கால்நடைச் சந்தை இடம் காலியாக உள்ளன. அந்த இடத்தில் சிறு வியாரிகள் தினசரி காய்கறிக் கடைகள் அமைத்து விற்பனை செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
Advertisement