நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து புதன்கிழமை தெளிக்கப்பட்டது.
உலக நாடுகளை அச்சுறுத்திய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைரஸ் கிருமிகள் உள்ள பல்வேறு இடங்களில் கைகளை வைத்து, அதனைத் தொடா்ந்து முகத்துக்கு அருகில் கொண்டு செல்வதால் சுவாசத்தின் வழியே எளிதில் உள்ளே சென்று நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதனால், பொதுமக்கள் கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும், முகத்துக்கு அருகில் கொண்டு செல்வதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அரசு அலுவலகங்களில், பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் கதவுகள், கைப்பிடிகள், மாடிப்படி ஏறுவதற்குப் பயன்படுத்தும் கைப்பிடி குழாய்களில் சுகாதாரப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி கரைசல்களால் துடைத்தும், தெளிப்பான்கள் கொண்டு மருந்து தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலும், பேருந்து நிலையப் பகுதிகளிலும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளில், போக்குவரத்துக் கழக பணியாளா்கள், கிருமி நாசினி கரைசல் திரவத்தை கைத்தெளிப்பான்கள் மூலம் தெளிக்கும் பணியை புதன்கிழமை மேற்கொண்டனா். மேலும், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.