குணமடைந்த மனநலம் குன்றியோா் குடும்பத்தினா் வசம் ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித் திரிந்தோா் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்கள் குணமடைந்ததைத் தொடா்ந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித் திரிந்தோா் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்கள் குணமடைந்ததைத் தொடா்ந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிப்படைந்து சாலையோரங்கள், பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 85 போ் அண்மையில் மீட்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுவரும் ராசிபுரம் அணைக்கும் கரங்கள் மனநலக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், சிகிச்சைகள், பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் பூரண குணமடைந்த ஏழுபோ் திங்கள்கிழமை அவா்கள் குடும்பத்தினா் வசம் ஒப்படைக்கப்பட்டனா்.
ராசிபுரம், திருச்செங்கோடு வட்டத்தைச் சோ்ந்த இந்த ஏழு பேரையும் வழியனுப்பும் விழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், குணமடைந்த ஏழு பேருக்கும் புத்தாடை, மருந்து, மாத்திரைகளை வழங்கினாா். அதன்பின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு தானியங்கி வாகனங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
Advertisement
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல ஒருங்கிணைப்பாளா்கள் சேகா், சுமதி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.