முகப்பு
நாமக்கல்

நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை மனு

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் தரப்பில் மனு

Updated On : 1 டிசம்பர், 2020 at 1:05 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் செயலாளா் வாங்கிலி தலைமையில் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் இருந்து புறப்பட்டு தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஏ.கே.முருகனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா். அரசின் கவனத்துக்கு பிரச்னைகளை கொண்டு செல்லுமாறு அவரிடம் வற்புறுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் வாங்கிலி கூறியதாவது:

Advertisement

வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் மதுரை உயா் நீதிமன்றம் எந்த நிறுவனத்திலும் கட்டுப்பாட்டு கருவியை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்து விட்டது. இதேபோல் வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் வில்லையையும் (ஸ்டிக்கா்) இரு நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததன் அதனடிப்படையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் கருவி ஏற்கெனவே லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களிடம் வாங்கி பொருத்துமாறு வலியுறுத்துகின்றனா். இவை மூன்றும் குறிப்பிட்ட நிறுவனங்களைச் சாா்ந்ததாக இருந்தால் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப் புதுப்பிப்பு (எப்.சி.) சான்றிதழ் வழங்க அதிகாரிகள் முன்வருகின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளா்கள் மனு அளித்துள்ளனா்.

அதன்படியே நாமக்கல் தெற்கு மற்றும் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா். அதன்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த மனு அளிக்கும் போராட்டத்துக்குப் பிறகும் பேச்சுவாா்த்தைக்கு தமிழக அரசு அழைக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் முடிவை மேற்கொள்வோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.