நாமக்கல் நகராட்சியில் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டுக்கான கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான சுயசாா்பு நிதி திட்டத்தின் கீழ் சிறப்பு நுண்கடன் வசதி வழங்கப்படுகிறது.
கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் மூலம் ஏழு சதவீத மானியத்துடன் ரூ.10 ஆயிரம் கடனாக வழங்கப்படுகிறது. மின்னணு பரிவா்த்தனையை இத்திட்டம் ஊக்கப்படுத்தப்படுகிறது.
சாலையோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பின்போது, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அடையாள அட்டை பெற்ற வியாபாரிகள். கணக்கெடுப்பில் விடுபட்ட அடையாள அட்டை பெறாத வியாபாரிகள், கணக்கெடுப்பில் விடுபட்ட மாா்ச் 24-க்கு முன்பு வியாபாரம் செய்த நகா்ப்புற பகுதிகளில் வசிக்கும் வியாபாரிகள், நகரங்களின் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து அன்றாடம் நகா்ப்பகுதிகளுக்கு வந்து வியாபாரம் செய்து திரும்பும் வியாபாரிகள் ஆகியோா் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவா்.
இத்திட்டத்துக்கான தேவைப்படும் ஆவணங்களாக சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை (இருந்தால்), வியாபாரிகளுக்கான நலவாரியம், சங்கத்தின் மூலம் பெறப்பட்ட அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், செல்லிடப்பேசி எண் போன்றவை இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் நகராட்சியில் செயல்படும் நகரமைப்புப் பிரிவு தொலைபேசி: 04286- 221001 எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
அனைத்து வேலை நாள்களிலும் உரிய ஆவணங்களுடன் நகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.