சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
சேந்தமங்கலம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.சந்திரன், அமைச்சர் தங்கமணி முன்னிலையில் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தார்.
நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.சந்திரன், அமைச்சர் தங்கமணி முன்னிலையில் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்(எஸ்.டி) தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.சந்திரன், திமுக சார்பில் கே.பொன்னுசாமி, அமமுக சார்பில் பி.சந்திரன் ஆகியோருடன், சுயேச்சையாக தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி, இந்திய ஜனநாய கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதிமுக வாக்குகளை அமமுக வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளரும் பிரிக்கும் சூழல் உள்ளது. இதனால் திமுக வெற்றி பெறக்கூடும்.
அண்மையில் சேந்தமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.தங்கமணி, கடந்த தேர்தலில் சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த பி.சந்திரன் அமமுகவில் இணைந்து விட்டார். அவர் அதிமுகவில் இருந்திருந்தால் இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என்ற தகவலை தெரிவித்தார்.
Advertisement
இதற்கிடையே ஆங்காங்கே கூட்டணி கட்சியான தேமுதிகவினருடன் பி.சந்திரன் பிரசாரம்செய்து வந்தார். பரமத்திவேலூரில் டிடிவி.தினகரன் பங்கேற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
அமமுகவின் நாமக்கல் மாவட்ட துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் சனிக்கிழமை திடீரென திருச்செங்கோட்டில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஏற்கெனவே திருச்செங்கோட்டில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹேமலதா என்பவரும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அவரும் அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது.
சேந்தமங்கலம் தொகுதியில் அமமுக போட்டியில் இருந்து விலகிக் கொண்டதால், தற்போது அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.