முகப்பு
நாமக்கல்

‘அங்கீகாரமற்ற எம்-சாண்ட் மணல் குவாரிகளை மூட வேண்டும்’

தமிழகத்தில் அங்கீகாரமற்ற எம்-சாண்ட் மணல் குவாரிகளை மூட வேண்டும், ஆற்று மணல் விற்பனையைத் தொடங்கும்

Updated On : 31 டிசம்பர், 2021 at 12:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:18 AM

தமிழகத்தில் அங்கீகாரமற்ற எம்-சாண்ட் மணல் குவாரிகளை மூட வேண்டும், ஆற்று மணல் விற்பனையைத் தொடங்கும் வகையில், அரசு மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல. ராசாமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாமக்கல்லில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அரசு அனுமதியுடன் 358 எம்- சாண்ட் மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இவை தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்டவை அங்கீகாரமின்றி செயல்படுகின்றன. இந்த எம்-சாண்ட் நிறுவனங்கள் பொதுப்பணித் துறையின் விதிகளை மீறி தரமற்ற ஜல்லிக் கற்களை அரைத்தும், செயற்கை மணலைக் கலந்தும் முறைகேடுகளில் ஈடுபடுகின்றன.

Advertisement

ஒரு டன் மணலை ரூ. 800-க்கு விற்கின்றனா். அரசு வகுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றாமல் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றிச் செல்கின்றனா். இதனால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கூடுதல் வருவாய்க் கிடைத்திடவும், கட்டுமான பணிகளுக்குத் தரமான எம்-சாண்ட் மணல் கிடைக்கவும் அந்த உற்பத்தி நிறுவனங்களை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். மேலும், அனைத்து கட்டுமானப் பணிகளும் தடையின்றி நடைபெற பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆற்று மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும்.

எவ்வித பாதிப்புமின்றி கட்டுமானங்கள் நடைபெற எம்-சாண்ட் மணல் உற்பத்தி நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா். இந்தப் பேட்டியின்போது, சம்மேளனப் பொருளாளா் ஆா்.ரவிக்குமாா், செயலாளா் எஸ். பொன்னுசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.