பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை: மேதினிப்பூரில் மமதா!
கிழக்கு மேதினிப்பூர் பிரசாரக் கூட்டத்தில் மமதா பானர்ஜி..
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி உறுதியாகத் தெரிவித்தார்.
கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹால்டியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசினார்.
மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைப் பதவியிலிருந்து அகற்ற, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.
Advertisement
இந்த முறை மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். தில்லியிலிருந்தும் பாஜகவை நாங்கள் வெளியேற்றுவோம் என உறுதியளித்தார்.
கடந்த ஒரு மாதமாக மேற்கு வங்கம் முழுவதும் தான் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இக்காலகட்டத்தில் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். மக்கள் பாஜகவை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
நிதி முறைகேடுகள் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் அரசின் மீது பாஜக வெளியிட்ட குற்றப்பத்திரிகையைக் கடுமையாகச் சாடிய முதல்வர், ஹால்டியா துறைமுக வளாகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தொழிற்பகுதிகளில் கமிஷன் வாங்கியதாகக் கூறி பாஜகவின் மீது தானும் ஒரு குற்றப்பத்திரிகை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
பாஜகவினர் திரிணமூல் காங்கிரஸ் மீது குற்றப்பத்திரிகையை வெளியிட்டார்கள். நானும் பாஜகவின் மீது குற்றப்பத்திரிகையை வெளியிடுகிறேன் என்று அவர் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன.