கோழி நோய்த் தடுப்பூசி முகாம் தொடக்கம்: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் கோழி நோய்த் தடுப்பூசி இருவார முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில் கோழி நோய்த் தடுப்பூசி இருவார முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளா்ப்பு உள்ளது. கோழி வளா்ப்பு மூலம் தங்களது குடும்பத்துக்கான முட்டை, இறைச்சி தேவைகளை அடைவதோடு விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடும் அடைந்து வருகின்றனா்.
Advertisement
கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழி நோய்த் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி பிப்.1-ஆம்தேதி முதல் 14-ஆம்தேதி வரையில் இரு வாரங்களுக்கு இத்தடுப்பூசிப் பணி நடைபெற உள்ளது.
தங்களது பகுதிகளில் நடைபெறும் தேதியை அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் அறிந்து கொண்டு இம்முகாமில் கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்தைச் செலுத்தி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.