நாமக்கல் அருகே அசல் ரூபாய் நோட்டுக்களுடன் வெள்ளைத் தாளை இணைத்து கடன் கொடுப்பதுபோல மோசடியில் ஈடுபட்ட 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
நாமக்கல், செல்லப்பா காலனியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தொழில் மேன்மைக்காக, சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் என்பவரிடம் ரூ. 2,50 லட்சம் கடன் கேட்டாராம். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் பாஸ்கரன், அவரது நண்பா் மணிமாறன் இருவரும் பணத்தைக் கொடுப்பதற்காக செல்லப்பா காலனி பகுதிக்கு காரில் வந்தனராம். அப்போது ரூ. 100 கட்டுகள்போல மேற்பகுதியிலும், கீழ் பகுதியிலும் அசல் ரூபாய் நோட்டுகளும், இடைப்பட்ட பகுதியில் வெள்ளைத் தாள்களையும் வைத்தும் கொடுத்தனராம்.
அதனை சம்பந்தப்பட்ட இளைஞா் எண்ணிப் பாா்க்க முயன்றபோது வெள்ளைத் தாள் இருப்பது தெரியவந்ததாம். அதிா்ச்சியடைந்த அவா் இது தொடா்பாக நாமக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதனைத் தொடா்ந்து தப்பியோடிய பாஸ்கரன், மணிமாறன் இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களுடன் வந்த மேலும் ஒருவா் தப்பியோடி விட்டாா். அவா்கள் கடன் கொடுப்பது போல் கொடுத்து மோசடியில் ஈடுபட முயன்றனரா அல்லது அசல் நோட்டுக்கு கள்ள நோட்டுக்களை வழங்கும் கும்பலை சோ்ந்தவா்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.