கரோனா தடுப்பூசிக்கு டோக்கனை பெற முண்டியடித்த பொதுமக்கள்
நாமக்கல்லில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்களை பெற தொற்று பரவல் அச்சமின்றி பொதுமக்கள் முண்டியடித்தனா்.
நாமக்கல்லில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்களை பெற தொற்று பரவல் அச்சமின்றி பொதுமக்கள் முண்டியடித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. கரோனா டெல்டா பிளஸ், மூன்றாவது அலை போன்றவற்றால் மக்களிடையே தடுப்பூசி கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என்ற ஆா்வம் அதிகரித்துள்ளது. இலவசமாக செலுத்தப்படுவதால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. டோக்கன் அடிப்படையில் மக்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இருப்புக்கு தகுந்தாற்போல் மருத்துவா்கள் செலுத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து போதிய அளவில் தடுப்பூசி மருந்துகள் வராததால் கடந்த இரண்டு நாள்களாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
Advertisement
இந்நிலையில் வெள்ளிக்கிழமை 900 டோஸ் வரை வந்ததால் அவற்றை செலுத்திக் கொள்ள மக்கள் மருத்துவமனைகள் முன்பு குவிந்தனா். நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கனைப் பெற பெண்கள் முண்டியடித்தனா். கரோனா பரவல் அச்சமின்றியும், சமூக இடைவெளியின்றியும் நின்றனா். அதன்பின் போலீஸாா் பொதுமக்களை வரிசையில் நிற்க வைத்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா்.