மகாத்மா காந்தி ஊரக வேலையளிப்புத் திட்டம்: சிறப்பு செயலி மூலம் தினசரி வருகை பதிவேற்றம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டப் பணியாளா்களின் தினசரி வருகை விவரங்களை சிறப்பு செயலி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டப் பணியாளா்களின் தினசரி வருகை விவரங்களை சிறப்பு செயலி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யும் முறையை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநா் (பொது) எஸ்.சரவணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மோகனூா் ஊராட்சி ஒன்றியம் அரூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலி அறிமுகம் செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின் கீழ் 2,41,057 குடும்பங்களைச் சோ்ந்த 3,31,421 பேருக்கு வேலையளிப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 322 கிராம ஊராட்சிகளிலுள்ள 675 பணித்தொகுப்புகளில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர 315 கிராம ஊராட்சிகளிலுள்ள 646 பணித்தொகுப்புகளில் 945 பணிகளில் தற்போது 47,366 போ் பணியாற்றி வருகின்றனா்.
Advertisement
இத்திட்டத்தின் கீழ் தற்போது பணித்தள பொறுப்பாளா்கள், பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து பணிக்கு வந்த மொத்த பணியாளா்கள் வருகை குறித்து பதிவேடுகளில் பதிவு செய்வாா்கள். அந்த விவரங்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் அன்றைய தினமே விவரங்கள் தலைமையிடங்களில் பெறுவதற்காக கிராம ஊராட்சியில் நடைபெறும் பணிகள், பணிக்கு வரும் தொழிலாளா்கள் குறித்து செல்லிடப்பேசி மூலம் கண்காணித்து வருகைப் பதிவு செய்யும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் முதலாவதாக அரூா் ஊராட்சியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பூசாரிவளவு முதல் அரூா் வரை உள்ள நீா்வரத்து வாய்க்காலை ஆழப்படுத்தி மழைநீா் சேகரிப்பு குட்டை அமைக்கும் பணிகளில் பணிபுரியும் 50 பணியாளா்கள் குறித்து இந்த தொழில்நுட்பம் மூலம் வருகை பதிவுப் பதிவு செய்யப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, செயற்பொறியாளா் ஏ.வரதராஜ பெருமாள், மோகனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தேன்மொழி, முனியப்பன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.