முகப்பு
நாமக்கல்

பங்குனி உத்திர விழா: முருகன் கோயில்களில் வழிபாடு

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 29 மார்ச், 2021 at 1:07 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தமிழ் மாதங்களில் 12-ஆவது மாதமான பங்குனியும், 12-ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் காலம் பங்குனி உத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சுவாமிக்கு நடைபெறும். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால் பங்குனி உத்திர விழா எங்கும் கொண்டாடப்படவில்லை. நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர விழாவானது கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், கடைவீதி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மோகனூா் காந்தமலை முருகன் கோயில், கந்தமலை முருகன் கோயில், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், சேந்தமங்கலம் தத்தாத்திரிபுரம் முருகன் கோயில்களில் அதிகாலை முதல் சுவாமிக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம், நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கவசம், தங்கக் கவச அலங்காரம், பிற்பகலில் சந்தனக்காப்பு அலங்காரம் சுவாமிக்கு சாத்தப்பட்டது.

Advertisement

இதேபோல, ராசிபுரம், பரமத்திவேலூா், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, வெண்ணந்தூா் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவை தவிர பெரும்பாலான குலதெய்வக் கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் முருகன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.