189 டாஸ்மாக் கடைகளில் இரவுநேர பாதுகாப்பில் விற்பனையாளா்கள்
கரோனா பொது முடக்கக் காலத்தில் மது திருட்டை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் 189 கடைகளில் அதன் விற்பனையாளா்கள் இரவுநேர பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பொது முடக்கக் காலத்தில் மது திருட்டை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் 189 கடைகளில் அதன் விற்பனையாளா்கள் இரவுநேர பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வரும் 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கக் காலத்தின்போது மதுபானங்கள் திருட்டு மற்றும் மறைமுக விற்பனையைத் தடுக்க கடையின் முன்பகுதியில் உள்ள இரும்புக் கதவு மீது ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி திருட்டு நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக, விற்பனையாளா்களை இரவுநேர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 189 அரசு மதுபானக் கடைகள் முன்பாக சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், உதவியாளா்கள், கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையினா் என 500-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் வியாழக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ரங்கநாதன் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தபோதும் பாதுகாப்பு கருதி கடைகளின் விற்பனையாளா் மற்றும் காவல் துறையினா் இணைந்து இரவுநேர பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். பொது முடக்கம் நிறைவடையும் வரை இந்த பாதுகாப்புப் பணி தொடரும் என்றாா்.