நாமக்கல்லில் 4 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று அதிகம் உள்ள நான்கு பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்கு இரும்புத் தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று அதிகம் உள்ள நான்கு பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்கு இரும்புத் தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகளில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தொற்றுக்குள்ளாகி உள்ளனா். நோய் பரவலைக் கட்டுப்படுத்த வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் வீதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியும், பிளீச்சிங் பவுடா் போடும் பணியும் நடைபெற்றது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாததால் கொசவம்பட்டி, சந்தைப்பேட்டைபுதூா், ஏ.எஸ்.பேட்டை, சின்ன முதலைப்பட்டி ஆகிய நான்கு இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மண்டலத்துக்கு உள்பட்ட பரமத்தி சாலை, பூசாரி தெரு, பத்திரகாளியம்மன் தெரு, இ.பி. காலனி, ஏ.எஸ்., என்.ஜி.ஓ.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரும்புத் தகரம் கொண்டு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
14 நாள்களுக்கு அப்பகுதியில் உள்ளோா் வெளியில் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று அதிகம் உள்ளதால், நாமக்கல் நகராட்சி சாா்பில் அங்குள்ள வீடுகளுக்கு மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருள்கள் நேரடியாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதார அலுவலா் சுகவனம் ஆகியோா் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
Advertisement
நகராட்சி நிா்வாகத்தின் முடிவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தினசரி கபசுரக் குடிநீா் வழங்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.