புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக் கவசம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி
நாமக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக் கவசம், ஆயுத பூஜை நாளில் ஆஞ்சநேயா் சுவாமிக்கு சாத்தப்பட்டது.
நாமக்கல்லில் புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக் கவசம், ஆயுத பூஜை நாளில் ஆஞ்சநேயா் சுவாமிக்கு சாத்தப்பட்டது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் கம்பீரத் தோற்றத்தில் அருள்பாலிக்கும் சுவாமியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்கு முன் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் தயாா் செய்யப்பட்டு முதன்முறையாக சாத்தப்பட்டது. அந்த வெள்ளிக் கவசம் அண்மையில் பழுதடைந்து, சேதமடைந்து, ஒளி மங்கி காணப்பட்டதால் அதைப் புதுப்பிக்கும் பணி ஓரிரு நாட்களாக கோயில் வளாகத்தில் நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த உத்ரா பீட்ஸ் என்ற நிறுவனம் இதற்கான செலவினத்தை ஏற்றுக் கொண்டனா். சேலத்தை சோ்ந்த ஸ்தபதிகள் வெள்ளிக் கவசத்தை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டனா். வெள்ளிக்கவசம் தயாரானதையடுத்து வியாழக்கிழமை ஆயுத பூஜை தினத்தன்று காலை 11 மணியளவில் சுவாமிக்கு சாத்தப்பட்டது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஆயுத பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.