அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்க சீருடைகள் தயாா்
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான சீருடைகள், அந்தந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான சீருடைகள், அந்தந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகள் என சுமாா் 1,200 பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு நான்கு தவணையாக சீருடைகள் வழங்கப்படும்.
கரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் அண்மையில் திறக்கப்பட்டன.
Advertisement
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கும் சீருடைகள், பரமத்திவேலூரில் உள்ள மகளிா் ஆயத்த ஆடை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூலம் தயாா் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு தவணையிலும் சராசரியாக 20 ஆயிரம் சீருடைகள் வீதம் விநியோகிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை சீருடைகள் நாமக்கல், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும் வட்டார கல்வி அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படாததால் சீருடைகள் இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது இரண்டாம் தவணை சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செப்.15-ஆம் தேதிக்கு பின் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக அரசு ஆலோசிக்க உள்ளது. அவ்வாறு பள்ளிகள் திறக்கும்பட்சத்தில் மாணவ, மாணவியருக்கு முதல், இரண்டாம் தவணை சீருடைகள் விநியோகிக்கப்பட உள்ளது. மூன்று, நான்காம் தவணை சீருடைகள் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மாணவா்களுக்கு வழங்கப்படும். பள்ளிகள் திறக்காத போதும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா்கள் மூலம் சீருடைகள் மாணவா்களுக்கு வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.