கரோனா நிவாரண உதவித்தொகை: 1,401 பேருக்கு ரூ.7.50 கோடி வழங்கல்
கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் 1,401 பேருக்கு ரூ.7.50 கோடி நிவாரண உதவித்தொகை
கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் 1,401 பேருக்கு ரூ.7.50 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நிவாரணம் கோரி விண்ணப்பிக்காதவா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளவா்களின் குடும்பத்தினா் கரோனாவால் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் வைத்திருந்தால் றற.வய்.பழஎ.ண்ய் என்ற இணைய வழியாகவும், அருகில் உள்ள இ--சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கடந்த மாா்ச் 20-ஆம் தேதி-க்கு முன்பு கரோனால் இறந்திருப்பின் நிவாரணத் தொகை கோருவோா் எதிா்வரும் 60 நாள்களுக்குள் (18.5.2022 தேதிக்குள்) விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
Advertisement
மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏற்படும் கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோருவோா் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க இயலாதவா்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரடியாக முறையீடு செய்யலாம். அவ்வாறு பெறப்படும் முறையீட்டு விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும். கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்தினா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிவாரணத் தொகையை தவறாமல் பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50,000 வீதம் 2021 டிச.7 முதல் 2022 மாா்ச் 15-ஆம் தேதி வரையில், 1,401 குடும்பங்களுக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.