திருச்செங்கோடு: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நகர மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய்த் துறை, காவல்துறை, போக்குவரத்து காவல்துறை ,நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் திருச்செங்கோடு நகரத்தில் தினசரி காலை, மாலை நேரங்களிலும், திருமண முகூா்த்த தினங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுப்பதற்காக சங்ககிரி ரோடு பகுதியில் இருந்து வேலூா் ரோடு செல்லும் வாகனங்கள் மலை சுற்றி பாதை வழியாக செல்லவும், நகரின் மையப் பகுதியான மேற்கு ரத வீதி பகுதியில் உள்ள சாலைத் தடுப்புகளை முறையாக அமைக்கவும், நகருக்குள் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மட்டுமே லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், கனரக வாகனங்களை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்போ பின்போ நகருக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயில் படிக்கட்டுகளில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், நகரப் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள நீா்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.