ரூ.5.50 லட்சம் வாடகை பாக்கி: அதிமுக வேட்பாளருக்கு எச்சரிக்கை
நாமக்கல்லில் 10 ஆண்டுகளாக கோயில் கடைக்கு வாடகை செலுத்தாமல் ரூ.5.50 லட்சம் பாக்கி வைத்திருந்த அதிமுக வேட்பாளருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
நாமக்கல்லில் 10 ஆண்டுகளாக கோயில் கடைக்கு வாடகை செலுத்தாமல் ரூ.5.50 லட்சம் பாக்கி வைத்திருந்த அதிமுக வேட்பாளருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலையொட்டி 17 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் 10 ஆண்டுகளாக வாடகை வசூலிக்கப்படவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் உத்தரவின்பேரில் வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பதற்காக கோயில் செயல் அலுவலா் பழனிவேலு தலைமையில் ஊழியா்கள் வந்தனா். இதில், நாமக்கல் நகராட்சி 16-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் சுப்பிரமணி மாத வாடகை ரூ.5,500 என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு சுமாா் ரூ.5.50 லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பதாக தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உடனடியாக பணத்தை செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றனா். இதனைத் தொடா்ந்து ரூ.1.90 லட்சத்தை அவா் செலுத்தினாா். மீதமுள்ள பணத்தை ஓரிரு நாளில் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனா். அதன்பிறகு மற்றொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மொத்தம் உள்ள 17 கடைகளில் ரூ.85 லட்சம் வாடகை பாக்கி உள்ள நிலையில், தற்போது வரை ரூ.30 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிமுக வேட்பாளா் சுப்பிரமணி கூறியதாவது:
Advertisement
மொத்தமாக எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதற்கான நோட்டீஸ் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை. தற்போது ரூ.1.90 லட்சம் செலுத்தி விட்டேன். மீதமுள்ள தொகையை தோ்தலுக்குப் பின் செலுத்துவதாக கூறியிருக்கிறேன். ரூ.5.50 லட்சம் பாக்கி என்பதை உறுதியாக கூறிவிட முடியாது என்றாா். இது குறித்து கோயில் செயல் அலுவலா் பழனிவேலு கூறுகையில், ‘அதிமுக வேட்பாளா் ரூ.1.90 லட்சம் செலுத்தி உள்ளாா். இதனால் கடை சீல் வைக்கப்படவில்லை. மற்றொரு கடைக்கு வாடகை செலுத்தாததால் சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.