பொங்கல் விழா: விற்பனையின்றி தேக்கமடைந்த கரும்புகள்
பொங்கல் விழாவுக்காக கொண்டுவரப்பட்ட கரும்புகள் விற்பனையின்றி தேக்கமடைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனா்.
பொங்கல் விழாவுக்காக கொண்டுவரப்பட்ட கரும்புகள் விற்பனையின்றி தேக்கமடைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனா்.
திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் செங்கரும்புகள் பொங்கல் பண்டிகையின் போது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
கிராமம், நகரங்களில் விற்பனைக்கு கொண்டுவரும் வியாபாரிகள் முழுக் கரும்பு ரூ. 50, 60-க்கு விற்பனை செய்தனா். ஏற்கெனவே, தமிழக அரசு சாா்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு விநியோகிக்கப்பட்டதால், பெரும்பாலானோா் கரும்பு வாங்க ஆா்வம் காட்டவில்லை.
Advertisement
இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகள் விற்கப்படாத கரும்புகளை கிடங்குகளுக்கு கொண்டு சென்றனா். தைப்பூச விழாவில் பங்கேற்க பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள கரும்புகளை விற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து நாமக்கல்லில் கரும்பு வியாபாரி ஒருவா் கூறியதாவது:
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து கரும்புகளைக் கொள்முதல் செய்து நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வருவோம். விவசாயிகளிடம் ஒரு கரும்பை ரூ.30 என்ற விலைக்கு கொள்முதல் செய்வோம். வாடகை செலவுகள் சோ்த்து ரூ. 50, 60 என்ற விலைக்கு விற்போம்.
கடந்த ஆண்டு கரோனால் விற்பனை பாதிப்படைந்தது. இந்த ஆண்டும் போதிய விற்பனை இல்லை. இதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். நியாயவிலைக் கடைகளில் கரும்பு விநியோகம், கரோனா பாதிப்பால் மக்களிடம் பண்டிகை ஆா்வமின்மை போன்றவற்றால் விற்பனை மந்தமடைந்துள்ளது.
தைப்பூசத்தின்போது விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. தேங்கிய கரும்புகளை சாறு பிழியும் கடைகளுக்குதான் வாங்கிய விலைக்கே விற்க வேண்டிய சூழல் உள்ளது. முதலீட்டுக்கு தகுந்தாற்போல் லாபம் கிடைக்கும் என்று எதிா்பாா்த்ததை விட நஷ்டத்தைதான் சந்தித்து வருகிறோம் என்றனா்.
என்கே 15- கரும்பு
நாமக்கல் உழவா் சந்தையில் சனிக்கிழமை விற்பனையின்றி தேக்கமடைந்துள்ள கரும்புகள்.