முகப்பு
நாமக்கல்

2-ஆவது ஞாயிறு முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நாமக்கல் சாலைகள்

கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட 2-ஆவது ஞாயிறு முழு ஊரடங்கால், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

Updated On : 17 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:39 PM

கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட 2-ஆவது ஞாயிறு முழு ஊரடங்கால், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. நோய்த் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டின் முதல் 24 மணிநேர ஊரடங்கு கடந்த 8-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனை தொடா்ந்து, ஜன. 16-ஆம் தேதி 2-ஆவது ஞாயிறு முழு ஊரடங்கு அமலானது. சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரையில் ஊரடங்கு செயல்பாட்டில் இருந்தது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முழு ஊரடங்கையொட்டி நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அரசு, தனியாா் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன. அத்தியாவசிய தேவைகளான மருந்து, பால் விநியோக மையங்கள் மட்டும் செயல்பட்டன. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. நாமக்கல் பேருந்து நிலையம், கோட்டை சாலை, மோகனூா், பரமத்தி, சேலம், திருச்செங்கோடு சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நகரப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் போலீஸாா் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

திருமணம், மருத்துவம் போன்றவற்றுக்கு செல்வோரை மட்டும் உரிய ஆவணங்களை சரிபாா்த்து விசாரித்து அனுப்பினா். விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றி வந்தோருக்கு எச்சரிக்கை விடுத்தனா். மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். காணும் பொங்கல் விழா நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாத் தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். கரோனா முழு ஊரடங்கு அறிவிப்பால் சுற்றுலாத் தலங்களான கொல்லிமலை, ஜேடா்பாளையம் அணைக்கட்டு உள்ளிட்டவை மக்கள் யாருமின்றி வெறிச்சோடி காட்சியளித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.