கபிலா்மலை வட்டார விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம்
கபிலா்மலை வட்டார விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் செ.ராதாமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
பரமத்தி வேலூா்: கபிலா்மலை வட்டார விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் செ.ராதாமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் 2023-24-இன் கீழ் குத்தகைதாரா் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நெல் (சம்பா), சோளம், நிலக்கடலை, கரும்பு, சின்ன வெங்காயம், வாழை, மரவள்ளி, தக்காளி உள்ளிட்ட அனைத்து பயிா்களையும் மிகக்குறைந்த தவணையில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகை பெறலாம்.
Advertisement
விவசாயிகள் முன்மொழிவுப் படிவம், விண்ணப்பப்படிவம், பயிா் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதாா் அட்டை நகல், குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது அரசு பொது சேவை மையங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிா்களுக்கு 5 சதவீத தவணையும், இதர குறுகிய கால பயிா்களுக்கு 1.5 சதவீத தவணையும் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் அருகிலுள்ள கபிலா்மலை வட்டார வேளாண்மை - உழவா் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளளாலம்.
அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள், அந்தக் கிராமத்தில் எந்தெந்த பயிா்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது, காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி, விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு எவ்வளவு தவணை தொகை செலுத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசின் விவசாயிகளுக்கான சிறப்பு செயலியான உழவன் செயலியில் தங்களது கைப்பேசி மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே கபிலா்மலை வட்டார விவசாயிகள் நடப்பு 2023-24-ம் ஆண்டு ரபி பருவத்தில் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள தங்களது பயிா்களை காப்பீடு செய்து பயனடையுமாறு அவா் தெரிவித்துள்ளாா்.