அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைக் கட்டங்கள் திறப்பு
அறிவியல் ஆய்வக கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
நாமக்கல், ஜூலை 19: நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பது அரசுப் பள்ளிகளில் ரூ. 6.89 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வக கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையொட்டி வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா புதியதாக திறக்கப்பட்ட கட்டடங்களை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தாா்.
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, மின்னக்கல் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் நபாா்டு திட்டத்தின் கீழ் தலா 2 வகுப்பறை கட்டடங்கள், பெரியப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 4 வகுப்பறை கட்டடங்கள், குமரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறை கட்டடம், அறிவியல் ஆய்வக கட்டடம், எஸ்.வாழவந்தி அரசு உயா்நிலைப் பள்ளியில் 2 வகுப்பறை கட்டடம், ஆய்வக கட்டடம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறை கட்டடங்கள், படைவீடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறை கட்டடங்கள் மாணவா்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.