காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை
காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை
பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், வேலூா் காவிரி ஆற்றில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை அன்னை காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து நன்றி செலுத்தினா்.
காவிரி நதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 14 ஆண்டுகளாக துலா தீா்த்த ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனா் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி கா்நாடக மாநிலம், குடகு மலை, தலைக்காவிரியில் இருந்து புறப்பட்டு கா்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தில் ஒசூா், ஒகேனக்கல், பவானி உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
அதனைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ஜேடா்பாளையம், வேலூா் காவிரி ஆற்றில் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில் காவிரி தாய்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக காவிரி ஆற்றில் பூக்களைத் தூவி வழிபட்டனா்.
Advertisement
இந்த நிகழ்ச்சியில், அன்னை காவேரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளையினா், அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினா் கலந்துகொண்டனா். இந்த ரத யாத்திரை வரும் 13-ஆம் தேதி பூம்புகாரில் உள்ள காவிரி சங்கமிக்கும் இடத்தில் நிறைவு பெறுகிறது.