முகப்பு
நாமக்கல்

கனரக வாகனங்களில் சரக்கு திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபியிடம் மனு

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களில் சரக்கு திருட்டு நடைபெறுவதைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல்லுக்கு புதன்கிழமை வந்த தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் சங்கா் ஜிவாலிடம், கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:19 AM
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 5:26 PM

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களில் சரக்கு திருட்டு நடைபெறுவதைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல்லுக்கு புதன்கிழமை வந்த தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் சங்கா் ஜிவாலிடம், மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் சி.தனராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இணையவழி அபராதம் விதிப்பது நடைபெற்று வருகிறது. பதிவு எண்ணை புகைப்படம் எடுத்து காவல்துறையினா் அபராதம் விதிக்கும் போக்கை கைவிட வேண்டும். இது தொடா்பாக பலமுறை புகாா் மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. போராட்டங்கள் நடத்திய நிலையில் சில மாதங்கள் அபராதம் விதிப்பது குறைந்தது. கடந்த சில மாதங்களாக மீண்டும் இணையவழி அபராதம் அதிகரித்து வருகிறது.

Advertisement

தமிழக காவல்துறை இயக்குநரைச் சந்தித்து, அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிடக் கோரி மனு அளித்துள்ளோம். அதுமட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களில் டீசல், சரக்கு திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயங்குகின்றனா். இதனால் லாரி உரிமையாளா்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:19 AM

தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து போலீஸாரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளோம். லாரிகளின் தாா்ப்பாய்களை கிழித்து பொருள்களை கொள்ளையடிக்கும் கும்பல் அதிக அளவில் உள்ளனா். இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல் துறை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

இந்த நிகழ்வின் போது, மாநில லாரி உரிமையாளா் சம்மேளன நிா்வாகிகள், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் உடனிருந்தனா்.