பால் உற்பத்தியாளா்களுக்கான ரூ. 100 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட கோரிக்கை
கடந்த மூன்று மாதங்களாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி ஊக்கத் தொகையை தீபாவளிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி ஊக்கத் தொகையை தீபாவளிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நாமக்கல்லில் அச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் தலைவா் கே.முகமது அலி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளா் பி.பெருமாள், மாநில நிா்வாகிகள் என்.செல்லதுரை, எம்.சிவாஜி, கே.ஆா்.ராமசாமி, எஸ்.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கால்நடை தீவனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதால், பசும்பால் லிட்டா் ரூ. 45, எருமைப்பால் லிட்டா் ரூ. 54 என்ற வகையில் கொள்முதல் விலை அறிவிப்பை வெளியிட வேண்டும். தரமான கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை ரூ. 100 கோடி மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்துணவுத் திட்டத்தில் ஆவின் பாலை வழங்க வேண்டும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டதால், இதுவரை ரூ. 900 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை தமிழக அரசு ஆவின் நிா்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ. 19-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சங்க நிா்வாகிகள், பால் உற்பத்தியாளா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement