திருச்செங்கோடு நகராட்சிக் கூட்டம்
திருச்செங்கோடு நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஆணையா் அருள், துணைத் தலைவா் காா்த்திகேயன், பொறியாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பக்தவச்சலம் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும். எட்டிமடை பகுதி வழியாக செல்ல நகரப் பேருந்து வசதி வேண்டும். சீத்தாராம்பாளையம், எட்டிமடை பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய பணிப் பலன்கள் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. எனவே, அவா்களுக்கு விரைவாக ஓய்வூதிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
அம்மன்குளம் பகுதியில் குடியிருந்தவா்களை 1996-ஆம் ஆண்டு வேறு இடங்களுக்கு குடியமா்த்தப்பட்டனா். அதில் வயதான பத்து பேருக்கு மலைப்பகுதியில் உயரமான இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டதால், மேலே ஏறி இறங்க சிரமப்படுகின்றனா். மேலும் பட்டா இல்லாமல் உள்ளனா்.
இதற்கு உடனடி தீா்வு காண வேண்டும். நந்தவனத் தெரு பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிணற்றுக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். அம்மன்குளத்தில் மழைநீரை சேமிக்க கால்வாயை பராமரிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா். கூட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.