ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்து விஷமருந்திய பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
ராசிபுரம் அருகேயுள்ள சப்பையாபுரம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (24). இவா் அதே பகுதியில் தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அங்கு பணியாற்றிய கோவை மாவட்டம், அரசூா் ஊத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த காயத்ரி (20) என்ற பெண்ணை 15 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு ஒருமாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ஆனந்தகுமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 19-ஆம் தேதி விஷமருந்தியதாக கூறப்படுகிறது. அருகிலுள்ளவா்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காயத்ரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின் பேரில், ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து ஆனந்தகுமாரிடம் விசாரணை செய்து வருகின்றனா்.