தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1-ஆம் தேதி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவசர ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில நெசவாளா் அணி தலைவா் நன்னியூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா். என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:
தமிழக முதல்வரின் 73-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்டம், ஒன்றிய, நகர, பேரூா்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாா்ச் 1-ஆம் தேதி பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும்.
அந்த நாளில் ஒன்றிய, நகர, பேரூா்களில் வாா்டுகள் வாரியாக கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும். ஆதரவற்ற முதியோா் இல்லத்துக்கு உணவு, பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க வேண்டும்.
கோவையில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாக்குச்சாவடி பாக முகவா்கள் மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், ஒன்றிய, நகர, பேரூரில் உள்ள 8,858 பேரும் பங்கேற்க வேண்டும்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூரில் பாகம் வாரியாக வீடுதோறும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மகளிா் அணியைச் சாா்ந்த 8,990 போ் மாா்ச் 8-ஆம் தேதிவரை வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி துணை மேயா் செ.பூபதி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.