குடிநீர் விநியோகம் முறையாகச் செய்யப்படாததைக் கண்டித்து சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி மாமாங்கம் பகுதியில் உள்ள ஊற்றுக் கிணற்றிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே ஊற்றுக் கிணற்றில் இருந்து கடந்த பல நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறி சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரம் வரை நடைபெற்ற மறியல் காரணமாக சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸார் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டம் தாற்காலிகமாக கைவிடப்பட்டது.