அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வாழப்பாடியில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து,
வாழப்பாடியில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வாழப்பாடி வட்டத் தலைவர் எம்.மனோகரன் தலைமை வகித்தார். வட்ட செயலர் ஏ. சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். முடிவில் வட்ட நிர்வாகி கவிதா நன்றி கூறினார்.