முகப்பு
சேலம்

மேட்டூர் காவிரியில் செத்து மிதக்கும் மீன்கள்

மேட்டூர் காவிரியில் செத்து மிதக்கும் மீன்களால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். மேட்டூர் நீர்தேக்கம் 60 சதுரமைல் பரப்பு கொண்டது. அணையின் நீர் மட்டம் 120 அடியாக உயர்ந்தால் நீர்தேக்கம் கடல்போல்

Updated On : 15 மே, 2018 at 2:37 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

மேட்டூர் காவிரியில் செத்து மிதக்கும் மீன்களால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். மேட்டூர் நீர்தேக்கம் 60 சதுரமைல் பரப்பு கொண்டது. அணையின் நீர் மட்டம் 120 அடியாக உயர்ந்தால் நீர்தேக்கம் கடல்போல் காட்சியளிக்கும்.
இந்த நீர்தேக்கத்தில் கட்லா, ரோகு, கெண்டை, கெழுத்தி, மிர்கால், அரஞ்சான், ஆரால், திலேபி, வாலை உள்ளிட்ட பலவகையான மீன்கள் உள்ளன. நீர்தேக்கப் பகுதியிலும் அணையின் கீழ் பகுதியிலும் இரண்டாயிரம் மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 10 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2 ஆயிரம் ககனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் கீழ் மட்ட மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர் தேக்கத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்ணீர் சேற்று நாற்றத்துடன் வெளியேறுகிறது.
இதனால், ஞாயிறு, திங்கள்கிழமைகளில் செக்கானூர் கதவணை பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. காலை நேரங்களில் மீன்கள் மயங்கி மிதக்கின்றன. இவற்றை கிராம மக்களும், மீனவர்களும் பிடித்துச் செல்கின்றனர்.
இரவு நேரங்களில் மீன்கள் செத்து மிதக்கின்றன. சிறு குஞ்சு மீன்கள் முதல் இரண்டுகிலோ எடைகொண்ட பெரிய மீன்கள் வரை செத்து மிதப்பதால் பொறையூர், கோல்கநாய்கன்பட்டி, செக்கானூர் பகுதியில் காவிரி கரையில் துர்நாற்றம் வீசுகின்றன. இறந்த மீன்களை சில கருவாடாக்க காயவைத்துள்ளனர்.
மீன்கள் காவிரியில் செத்து மிதப்பது தொடர் கதையாக உள்ளது. மீன்கள் இறப்பு காரணம் கண்டுபிடித்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மேட்டூர் காவிரியிலும், நீர்தேக்கப் பகுதியில் மீன் இனம் அழிந்து போகும் என்று மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.